Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸை கண்டு அஞ்சவில்லை: தள்ளாத வயதிலும் சிகிச்சை அளிக்கும் டாக்டர் 

அக்டோபர் 23, 2020 12:31

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 87 வயது ஹோமியோபதி டாக்டர் ஒருவர், கிராமங்களுக்கே சென்று ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறார். கொரோனா வைரஸ் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக முதியவர்களை இந்த வைரஸ் தாக்கினால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரும்பாலான முதியவர்களை கொரோனா வைரஸ் வீடுகளிலேயே முடக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மகாராஷ்டிர மாநிலத்தில் 87 வயது நிரம்பிய ஹோமியோபதி டாக்டர் ராமச்சந்திர தண்டேகர், கிராமங்களுக்கே நேரடியாக சென்று ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திர தண்டேகர், முல், பாம்பூர்ணா, பல்லர்ஷா ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறார். இதற்காக தினமும் குறைந்தது 10 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் செல்கிறார். 60 வருடங்களாக இவ்வாறு சைக்கிளில் சென்றே சிகிச்சை அளிப்பதை டாக்டர் ராமச்சந்திர தண்டேகர் வழக்கமாக கொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும் தனது வழக்கமான பணி முன்பு போலவே உள்ளதாகவும், கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு தன்னலமற்ற சேவையை தொடர்ந்து வழங்க விரும்புவதாகவும் டாக்டர் ராமச்சந்திர தண்டேகர் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 42,633 பேர் பலியாகி உள்ளனர். 1,59,346 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்